Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/24/2013

ஹாங்காங் (Hong Kong)

ஹாங்காங் (Hong Kong)


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்துகொள்ளும் ஹாங்காங் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒரு முக்கியமான நாடாக கருதப்படுகிறது. பிரிட்டன் வசம் இருந்த ஹாங்காங்கை திரும்ப சீனாவிற்க்கு தந்துவிட்டாலும் ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது சீனா. ஒரு நாடு இரு அமைப்பு என்ற முறையில் படிபடியாக கம்யூனிஸத்தை அமல்படுத்தி வருகிறது.

பிரிட்டனின் தாக்கத்தால் இந்த சீன மக்களுக்கு ஆங்கிலம், காண்டனீஸ், போர்ச்சுகீசியம், மாண்டரின் தெரிந்திருக்கிறது. இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்திலேயே ஹாங்காங்கில் வாணிகம், தொழில்கள் செய்து குடியுரிமை பெற்று வாழ்க்கிறார்கள். ஹாங்காங் ஏர்போர்ட் கடலும், மலைகளும் சூழ்ந்த விமான பாதை தளமாக இயற்கையுடன் இணைந்து காணப்படும் விமான நிலையம் ஆகும். இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும்.ஆன இந்த பிரதேசத்தை  செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கி மணல் நிரவி ஹாங்காங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சுற்றுலா தொழில்கள் மிக அபரிதமாக வளர்ந்து வருகிறது. 1998 ஆண்டில் தொடங்கிய மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் கட்டப்பட்டு 2003 திறப்பு விழா நடத்தப்பட்டது. மாலை வேளைகளில் ஹாங்காங் துறைமுகத்தை ஒட்டிய சொகுசு கப்பல் சாவாரியும், மின்விளக்குக் காட்ச்சிகளும் மனதை ரம்மியக்க வைக்கும்.

ஹாங்காங்கில் ரயில்வே நிலையத்தில் சென்டிரலில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன்  விக்டோரியா பீக் என்ற இடத்திற்க்கு இருக்கும் மெழுகு சிலையை பார்ப்பதற்கு மலைபாதையில் செல்ல டிராம் வண்டி இருக்கிறது. வண்டிபாதை மலைபகுதிகளில் பயணிப்பதினால் நாமும் இயற்கையை ரசித்து கொண்டு செல்லலாம். மேலே செல்ல செல்ல என்ன உயரத்தில் பயணிப்பது ஒருவகையான சந்தோசம் தான். ஏதோ ஒரு வகை பயத்தில் நாம் இன்னும் இருக்கமாக ஒட்டுக்கொண்டு நம் இருக்கையை பிடித்துகொண்டிருப்போம் எங்கே விழுந்துவிடுவோமோ என்று. இங்கு அப்படியே பயணத்தின் போதே இந்த தீவின் அழகையும் வானவீதியில் பலவகையான மககூட்டங்களின்  வர்ணஜாலங்களை ரசித்துவிடலாம்.

அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கு கண்கவரும் ஓவியங்கள், கைவினை பொருள்கள், எல்லாம் கிடைக்கின்றன. முதலில் இங்கு உள்வருவதற்கு முன் வாயிலிலேயே ஒருவர் கையை கட்டிகொண்டு நின்றிருந்தார்.  நாங்கள் அவரை நிஜமாக ஒருத்தர் நின்றுகொண்டிருக்கிறார் என்று நினைத்தோம். என்னடா ஆடாமல் அசையாமல் இருக்கிறாரே என்று நினைத்தால் அவரும் மெழுகு சிலை என்று புரிந்து அட என்று ஆச்சரியப்படாமல் எங்களால் இருக்க முடியவில்லை. பூரூஸ்லி, ஜாக்கிசான், பீட்டில்ஸ், காந்திஜி,மாவோ, டயானா, ஐஸ்டின், அமிதாப்பட்சன், போன்றவர்களின் உருவங்கள் தத்ரூபமாக வியக்க வைக்கிறது.

நோவாவின் பேழை என்ற இடம் மாவன் தீவில் உள்ளது. இது சென்ட்ரலில் இருந்து கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற எண்ணிய  கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்பட்ட கப்பல் "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது.

அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் இருந்த விலங்குகள் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு வெளியேறுகின்றன." என்பது பைபிள் கூறும் கதையாகும். பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிய ஒவ்வொரு ஜோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபாமாக உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட ஜோடி  விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.

இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நோவாவின் பேழைக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு விவரித்துக் கூறும், நோவாவின் பேழை பணியாளர்கள் உள்ளனர். ஆங்கிலம்  மற்றும் காண்டனீஸ் மொழிகளில் விவரிப்பாளர்கள் உள்ளனர்.

1982 புதிய உலக குழுமம் அன்ற நிறுவனம் சிம் சா சுயி கிழக்கில் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அவென்யூ ஆப் ஸ்டார் என்ற இடத்தில் உள்ள சாலையை உருவாக்கியது.  இரவு நேரங்களில் மின்சார கதிர்விச்சின் விளக்கொளிகளின் அலங்கார வடிவமைப்புக்களையும் ரசித்துகொண்டே நடக்கலாம். இங்கு சில குறிப்பிட்ட முக்கியமான நாட்களில் வண்ண வான வெடி காட்சியும், மக்கள் வண்ண கதிர்வீச்சின் காட்சியையும் இந்த அவென்யூ ஆப் ஸ்டாரின் சாலையில் இருந்து ரசிப்பார்கள் அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏராளமான் வெளிநாட்டினர் இதன் பார்த்து ரசித்த வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சியை காண முடிகிறது.

இந்த சாலையில் புகைபிடிக்க கூடாது, செல்ல பிராணிகளை அழைத்து செல்ல முடியாது, சைக்கிள், வண்டி எதுவும் இங்கு ஓட்டிச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால அபராத தொகை அதிக அளவில் இருக்கும். இந்த சாலையில் ப்ரூஸ்லியின் வெங்கல உருவ சிலையையும், இந்த சாலையின் நிலப்பரப்பில் ஜாக்கி சான், ஜெட்லி, போன்ற நட்சத்திரங்களின் கைதடங்களும், அவர்களின் பெயர்களுடன் கூடிய கையொப்பமும் பதித்துள்ளனர்.

இந்த வீதியில் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை,  மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், காணப்படுகின்றன ஒரு திறந்தவெளி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹாங்காங்  நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடும்.

ஹாங்காங் பூங்கா நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். பிரிட்டன் ஆட்சியில் இருக்கும் போது கட்டப்பட்ட இந்த பூங்கா தற்கால வசதிகளுடன் கட்டுவிக்கப்பட்ட பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், நீர்வீழ்ச்சி குகை, பறவைகளில் இருப்பிடம் என்று ஏராளாமான பகுதிகள் இருக்கின்றன. இது உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் இடமாக உள்ளது.




தியன் தான் புத்தர்

இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு  ஆரம்பித்தன. 1993 டிசம்பர், 29ம் தேதி இதன் கட்டு பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா ஹாங்காங், தாய்வான, இந்தியா, ஜப்பான, கொரியா, ற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்து விழாவை சிறப்பித்தனர். மூன்று மாடி கட்டிடங்களில் வட்டவடிவிலான வெங்கலத்திலான தமரை பூவின் மேல் புத்தர் அமைந்திருக்கும் சிலை அமைப்பு இருக்கிறது. முதலாவது தளத்தில் தேவர்கள் புத்தருக்கு விளக்கு, பழம் போன்றவற்றை அர்பணிக்கும் உருவங்களும் உள்ளது.

இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் ஸ்வஸ்திக் சின்னமும் இருந்த்து. புத்தர் முகம் வடக்கு நோக்கி திரும்பியதாக இருக்கிறது. இந்த புத்தர் கோவிலுக்கு கேபிள் கார் மூலமாக செல்லலாம். இந்த பயணம் 5.7. கிலோ மீட்டர் நீளமுடையவை. அடர்ந்த காட்டிலும், மலைபாதைகளிலும் கட்டப்பட்ட இந்த கேபிள் கார் இணைப்புக்கள்  மலையில் குறுக்கிலும் வளைந்தும், நெளிந்தும் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பயணத்தின் திசைகளில் மாற்றம் ஏற்படும்போதும் 5 ஜங்ஷன் இருக்கிறது. அதன் மூலம் பயண பாதைகள் திசைகளின் மாற்றத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மலைகளிலும், கீழே ஓடும் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்துகொண்டே செல்லும் இந்த நீண்ட பயணம் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு பயத்தையும் ஏற்படுத்துகிறது.  சர்ச், மசூதிகளும் ஹாங்காங்கில் உள்ளது. ஹிந்துகளுக்கென்று இஸ்கான் கோவிலும் உள்ளது.  வாடகை வீட்டையே கோவிலாக மாற்றி கிருஷணா உருவச்சிலைகளும், பிரபு பாத அவரின் உருவச்சிலையும், சீன பெண்களாலும், சீன ஆண்களாலும் தினபடி வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றது. சத்ய சாயியின் சென்டரும் பக்தர்களால நடத்தப்பட்டு வருகிறது. 




பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் என்ற புத்த விகாரம் ஹாங்காங் சா டின் என்ற இடத்தில் இருக்கிறது. இந்த விகாரத்திற்கு செல்லும் இருபாதைகளிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெளத்த பிக்குகளின் சிலைகள் இருக்கிறது. 1933 ஆம் ஆண்டில் சீன புத்த பிக்கு இங்கு வந்து இந்த மடாலயத்தை கட்டினார். புத்தரின் போதனைகளையும் மக்களுக்கு போதித்தார். 


புத்த பிக்குகள் இங்கே காவி உடைக்கு பதிலாக கருப்பு உடை அணிந்துள்ளனர். பிரதான பிக்கு மட்டுமே மஞ்சள் உடையும் அதற்கு மேல் சிகப்பு மேலாடை ஒன்றும் அணிந்துள்ளார். செருப்பு அணிவதற்கும் இங்கு தடைகள் இல்லை. புத்த விகாரையின் உள்ளே சுவர்களில் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான சிறிய பெட்டிகள், புத்தர் சிலை ஆயிரக் கணக்கில் உள்ளன. அந்த பெட்டிகளுக்கு குறி இடப்பட்டிருக்கிறது. அந்த பெட்டிக்கு சொந்தக்காரர் அந்த பெட்டியின் உள்ளே தனது இறந்த உறவினர்களின் படங்களை வைத்து சாம்பலையும் பேணி வைக்கின்றனர். புத்தர் அவர்களுக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த சாம்பலுக்கு பூசைகள் செய்கின்றனர்  இறந்தவர்களின் சாம்பலை எடுத்து பூசை செய்து, படையல் இடுவதும் போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை இந்த விகாரத்தில் செய்கின்றனர். சிங்மிங் .திருவிழாவின் போது இறந்தவர்களுக்கான வழிபாட்டு முறைகள் செய்து பழம், அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படையலிட்டு வணங்குகிறார்கள். அப்படி செய்தால் இறந்தவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகள்.. ஹாங்காங் நகரை மனக் கண்முன் நிறுத்தியது ..பாராட்டுக்கள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

ஹாங்காக் குறித்த தகவல்கள் அறிந்துகொண்டேன்! படங்களுடன் அருமையான பகிர்வு! நன்றி! தொடர்கிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

word veryfication எடுத்துவிட்டால் கருத்திட எளிமையாக இருக்கும்! ஆலோசிக்கவும்! நன்றி!